எல்லாருக்கும் வணக்கம். இது என்னோட முதல் போஸ்ட். இதை நான் சும்மா டைம் பாஸ் ப்லோக்ல இருந்து சுட்டேன். சாரி தம்பிங்களா ....

வினய் ஆறரை அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார், வசீகரமாக சிரிக்கிறார், அந்த காலத்து குரு கமல் மாதிரி தொங்கு மீசை, எந்த உடை போட்டாலும் இவருக்கு பொருந்துகிறது, படத்தில் அறிமுகமாகும் காட்சியில் காலேஜ் படிக்கும் பெண்கள் கைத்தட்டுகிறார்கள், மொத்தமாக அவ்வளவுதான்! நடிப்பு முழம் எவ்வளவு என்று கேட்கும் லெவலுக்கு தான் அவரது நடிப்பு!

அப்பா இறந்தபிறகு லண்டனில் இருந்து ஊருக்கு திரும்பும் அர்ஜூன் (வினய்) பிசினஸ் தொடங்கும் ஐடியாவில் இருக்கிறார். இங்கு வந்தபிறகு தான் தெரிகிறது அக்னிநட்சத்திரம் விஜயகுமார் ஸ்டைலில் அப்பாவுக்கு இன்னொரு சேனலும் இருந்திருக்கிறது, அந்த சேனலுக்கு தடாலடியான இன்னொரு பெண்வாரிசும் இருந்திருக்கிறது. மதுரையும், சென்னையுமாக மாறி இருவரும் போட்டுக்கொள்வது சொத்துக்கு வாரிசுச்சண்டை. வினய்க்கு பிசினஸ் தொடங்கவேண்டும் என்பது லட்சியமாக இருப்பது போல, அவரது தங்கைக்கு அமெரிக்காவுக்கு சென்று படிப்பது கனவாக இருக்கிறது. இடையில் எதிர்பாராவிதமாக வில்லன் ஒருவனும் சந்தர்ப்பச் சூழ்நிலையால் உருவாகிவிடுவதால் தங்கையை ஒருபுறமும், வில்லனை மறுபுறமும் சமாளிக்க வேண்டியிருக்கிறது வினய்க்கு. மாரியாத்தா கோயில் கூழுக்கு தொட்டுக்க கருவாட்டுக் குழம்பு மாதிரி ஒரே ஒரு ஹீரோயின் பாவனா, ஓக்கே.

வில்லனாக வரும் கிஷோர்குமார் ரியாக்‌ஷன்களில் அசத்துகிறார் என்றால், அவரது மனைவியாக பூங்கோதை கேரக்டரில் வரும் பெண் நடிப்பில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார். தன் ரவுடி கணவனுக்கு தரப்படும் மரியாதை குறித்த பெருமிதத்தை அவர் முகத்தில் காட்டும் காட்சிகள் பிரமாதம்.

ஆடிமாசத்தில் பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு பாலியல் வறட்சியால் அவதிப்படும் புதுக்கணவன்கள் மாதிரி ஆகிவிட்டார் விவேக். நகைச்சுவை சுத்தமாக நஹி, டீஷர்ட் போட்டுக்கொண்டு இளைஞர்களின் தோழராக இன்னமும் எவ்வளவு காலத்துக்கு தான் ஒப்பேத்துவாரோ தெரியவில்லை. இவரை விட சந்தானத்தின் காமெடி கொஞ்சம் பரவாயில்லை, புன்னகைக்கவாவது முடிகிறது. வினய்யின் தங்கையாக வரும் லேகா வாஷிங்டன் சரவெடி. வாய் மட்டும் கொஞ்சம் அவரது அழகை கெடுக்கிறது. முதல் காட்சியில் சுடிதார் அணிந்தும் பொட்டு வைத்து, மழையில் நனைந்து, டிபிக்கல் ஃபேமிலி கேர்ளாக பாந்தமாக இருக்கிறார். ஆனால் தொடர்ந்து வரும் காட்சிகளில் அவரது காஸ்ட்யூம் கண்ணறாவி.

ஹனீபா, தலைவாசல் விஜய், கிருஷ்ணா, நிழல்கள் ரவி என்று கேரக்டர்களை செதுக்கியிருப்பதில் இயக்குனர் கண்ணனின் கடின உழைப்பு மிளிர்கிறது. பாலசுப்ரமணியெம் கேமிரா கண்ணுக்கு குளிர்ச்சி. பாடல் காட்சிகளின் படமாக்கம் அபாரம். வித்யாசாகர் இசையில் ‘அது கூட தெரியாதா?' பாடல் இதம். சில காட்சிகள் முழுமையடையாமல் முடிவது போல தெரிகிறது. எடிட்டிங் சொதப்பலா? அல்லது சென்சார் கட்டா என்று தெரியவில்லை. படத்தின் முதல் பாதி ஜெட் வேகம், இரண்டாம் பாதியில் அதிகரித்திருக்கா விட்டால் கூட பரவாயில்லை, அதே வேகத்தை தொடர்ந்திருந்தால் கூட இன்னொரு கில்லியாக, இன்னொரு ரன்னாக படம் வந்திருக்கும். எப்படியிருந்தாலும் கலக்கலான பொழுதுபோக்கு காக்டெயிலாக வந்திருக்கிறது ஜெயம் கொண்டான்.

பெருத்த எதிர்ப்பார்ப்போடு வெளிவந்திருக்கும் ‘தாம் தூம்' சப்பையாகி விட்டதால், ஜெயம் கொண்டானுக்கு ஜெயம் நிச்சயம்!!

கருத்துகள் இல்லை: